அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் _

 உலகத்திற்கு அருட்கொடையாக உதித்த இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலக முஸ்லிம்கள் இன்று நினைவு கூருகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத்திற்கு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டியவர். அவர்களின் வருகையே மனித குல மீட்சிக்கு அடித்தளமிட்டது.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபிய நாட்டு மக்களின் ஒழுக்க நிலை மிகவும் சீர்கெட்டுப் போயிருந்தது. காட்டு மிராண்டிகள் போல் வாழ்ந்தவர்களை உத்தமத் தூதர் அவர்களே மனிதர்களாக மாற்றினார்கள். பின்னர் அவர்களை பண்புள்ளவர்களாக மாற்றினார்கள். தொடர்ந்து அந்த மக்களை இறை நெருக்கம் கொண்டவர்களாக மாற்றினார்கள்.

மனிதப் பண்பாட்டையே உயர்த்திய உத்தமர் எமது உயிரினும் மேலான புகழுக்குரியவர் கோமான் நபி(ஸல்) அவர்கள்தான் என்பதை சரித்திரம் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கத்தின் மேன்மைகளை முழுமைப்படுத்துவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன் என வள்ளல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் தமது சமுதாய மக்களுடன், உறவினர்களிடம், சந்ததிகளிடம், தோழர்களிடம், சிறுவர்களிடம், எதிரிகளிடம், அடிமைகளிடம், போர்க் கைதிகளிடம், பெண்களுடன் என சகல தரப்பினருடனும் நடந்து கொண்ட விதம் அவர்கள் உலகிற்கு அருட்கொடையாக விளங்கினார்கள் என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. நபி (ஸல்) அவர்களின் ஒழுக்கம் எப்படியிருந்தது? என்று நபித் தோழர்கள் ஹஸ்ரத் ஆயிஷா நாயகியிடம் கேட்டபோது அன்னாரின் ஒழுக்கம் குர்ஆனாகவே இருந்தது என அவர்கள் பதில் கூறினார்கள்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் இறை தூதராக அனுப்பப்படவில்லை. மாறாக உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழி காட்டக்கூடிய சத்தியத் தூதராக இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் பரிபூரண மனிதராக உலகில் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களின் சொல், செயல் யாவுமே மனித வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. நபியவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தொடர்பாக எழக்கூடிய எல்லா ஆட்சேபனைகளுக்கும் பதிலளிக்கக்கூடிய அளவுக்கு உள்ளது. அது மட்டுமன்றி அவர்கள் தொடர்பாக எழக்கூடிய எல்லா ஐயப்பாடுகளையும் நீக்கக்கூடிய அளவுக்கு திறந்த புத்தகமாக உள்ளது.

நபியவர்களின் நற்பண்புகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பழக்க வழக்கங்களின் பிறப்பிடமாவார்கள். வாய்மையுடைமை, தூய ஒழுக்கம், தீமையின்மை, கட்டுப்பாடான தன்மை, கண்ணிய உணர்ச்சி, மனித நேயம், உதவி செய்யும் மனப்பான்மை, மன்னிக்கும் பெருந்தன்மை, கடமையுணர்வு, நம்பிக்கைக்கு மாறு செய்யாமை, இரக்க மனப்பான்மை என்பன போன்ற இன்னோரன்ன நற்பண்புகளும் அருங்குணங்களும் அவர்களிடம் மிகைத்து காணப்பட்டன.

அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது, (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் 68 : 4) ரஷ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் ""மனிதனை எடை போடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மத் நபியவர்களாகத்தான் இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்போது இருபத்தைந்து வயது. அவர்களின் நேர்மையையும் இறைவன் மீது அவர்கள் கொண்டிருந்த அளவற்ற பற்றையும் குறித்து மக்களால் பரவலாகப் பேசப்பட்டது.

நபியவர்களை சுட்டிக் காட்டி ""இதோ உண்மை மிக்க மனிதர் சென்று கொண்டிருக்கிறார். இதோ நம்பிக்கைக்குரிய மனிதர் சென்று கொண்டிருக்கிறார்'' என்று அரேபிய மக்கள் அவர்களைப் பாராட்டினர்.

இச்செய்தி மக்காவின் சீமாட்டியாகிய விதவையான கதீஜா (ரலி) அவர்களுக்கும் எட்டியது. அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிபிடம் சென்று சிரிய நாட்டின் வர்த்தகக் குழுவுடன் செல்லும் தமது வர்த்தகப் பொருட்களின் பொறுப்பை அவர்களின் சகோதரரின் மகன் முஹம்மத் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டார்கள். அபுதாலிப் இதனை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் கூறவே நபியவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

இந்த வர்த்தகப் பயணத்தில் கதீஜா நாயகிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. நபியவர்கள் வர்த்தகத்தின்போது காட்டிய நேர்மையிலும் அவர்களின் நற்பண்புகளாலும் கவரப்பட்டு அன்னாரை திருமணம் செய்ய விருப்பம் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மூலம் திருமணத்திற்கான முடிவை உறுதி செய்து கொண்ட பின்னர் இருவருக்கும் திருமணம் நடந்தது.

செல்வந்த சீமாட்டியை திருமணம் செய்த நபியவர்கள் அந்த பெரும் செல்வத்தை தமக்காக வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு வாரி வழங்கி பின்னர் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தார்கள். இது முழு உலகிற்கும் படிப்பினையை கற்றுக் கொடுக்கும் விடயமாகும். ஹிராக் குகையில் இறை வணக்கம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதில் ஹிராக் குகையில் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலமாக திருக்குர்ஆனின் முதல் "வஹி' (இறை அறிவிப்பு) அருளப்பட்டது. இந்த வேத வெளிப்பாட்டின் மூலம் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரானார்கள்.

நபித்துவத்தின் பின் அவர்கள் வாழ்ந்த 23 வருட கால வாழ்க்கையானது முழு உலக மீட்சிக்கும் அடித்தளமிட்டது. அண்ணல் நபியவர்கள் அன்று நிலவிய சமூக, கலாசார சீரழிவுகளையும் மூட நம்பிக்கைகளையும் தீய பழக்க வழக்கங்களையும் அட்டூழியங்களையும் இறைவனின் உதவியோடு 23 ஆண்டு காலத்தில் ஒழித்துக் கட்டினார்கள். எங்கள் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில் நபியவர்களின் போதனைகளைப் பற்றியும் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகின் பல நாடுகள் யுத்த அரக்கனின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு இருக்கின்றன. முஸ்லிம் நாடுகள் பலவற்றிலும் முஸ்லிம் பிரிவுகள் மத்தியிலும் கருத்து முரண்பாடுகளும் மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

ஒரு முஸ்லிம் பிரிவினர் மற்றைய முஸ்லிம் சகோதர பிரிவினரை கொன்றொழிக்கும் கொடூரம் தினமும் நடந்தேறி வருகின்றன. இஸ்லாம் என்ற பதத்தின் கருத்து சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் என்பதாகும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை பார்த்து "ஸலாம்' கூறுவது ""சாந்தி, சமாதானம் உங்கள் மீது நிலவட்டும்'' என்ற அர்த்தத்தினாலேயாகும். நபியவர்கள் உலகில் சாந்தி, சமாதானத்தை நிலை நிறுத்துவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் என்பதை வரலாறு சான்று பகர்கிறது.

இந்நிலையில் உலக முஸ்லிம்கள் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்து ஒரே கொடியின் கீழ் ஒன்றுசேர வேண்டும். அல்குர்ஆனையும் இறை தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நேர் வழியையும் பின்பற்றுவதே வெற்றிக்குரிய ஒரே வழியாகும். அதுவே நபியவர்களை கௌரவிப்பதாக அமையும்.

0 comments: